அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut perum sothi nee

பல்லவி
அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன்
திருவரம் தருவாயே.
அனுபல்லவி
மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே
அருள் தந்து காப்பாயே. – அருட்
சரணங்கள்
1. அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,
தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,
செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ,
புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. – அருட்
2. வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,
புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,
மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,
என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ. – அருட்
3. இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம் நீ,
புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,
முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள் நீ,
பித்தன் எனக்கு வாய்த்த சித்த சிகாமணி நீ. – அருட்

Leave a Comment Cancel Reply

Exit mobile version