கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga

பல்லவி
கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம்,
கன்மலையைப் போற்றக் கூடிடுவோம்.
அனுபல்லவி
கர்த்தரின் தூய சந்நிதி நாடி
நித்தியனைத் துதியுடன் கொண்டாடி,
சரணங்கள்
1. தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன்
தெள்ளமுது தெளிதேன் மாதேவன்,
மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன்,
மூவுல கனைத்தும் படைத்த நிமலன். – கர்த்
2. ஆழங்களும் மகா உயரங்களும்
அத்தன் திருக்கையில் உள்ளனவே.
அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி
ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. – கர்த்
3. நம்மைப் படைத்த நல்லாயன் முன்னே
நாம் பணிந்திடுவோம் பண்புடனே,
நம் கர்த்தர் என்றும் நல் மேய்ச்சல் ஈவார்.
நம்பு மடியார்க்கு நாதன் கோன் ஆவார். – கர்த்
4. கர்த்தரின் சத்தம் காதினால் கேட்போம்,
கடுஞ் சினமும் கொள்ளா திருப்போம்,
முற் பிதாக்களன்று மூட்டிய கோபம் போல்
முன்னவர்க்குச் சினம் மூட்டாது வாழ்வோம். – கர்த்
5. சோதனைக் குழியில் வீழ்ந்து மாளாதீர்,
சோதனை செய்யவும் முன் வராதீர்,
பாதகப் பிசாசின் தீதகம் சிக்காதீர்,
நாதனைக் கிட்டியே நலங்கள் பெறுவீர். – கர்த்
6. ஆண்டவர் நமக்காய் ஆயத்தம் செய்தவோர்
ஆனந்த நிலையிருக்குது பார்,
அண்ணல் பதம்பாடி ஆர்ப்பரிப்பாய்க்கூடி,
அன்பரைத் தேடுவோம், பொன்னகர் நாடுவோம். – கர்த்
7. தந்தை சுதனுக்கும் ஆவியாம் தேவர்க்கும்
தங்கிட மகிமை எந்நாளுமே.
எந்தையாம் மாதிரியேகர்க்குச் சந்ததம்
இங்கிதம் புகழ் உண்டாகவே. ஆமென். – கர்த்

Leave a Comment Cancel Reply

Exit mobile version