காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை

பல்லவி
காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை
கனிவுடன் துதி பாடுவேன்
அனுபல்லவி
காலை நேரத்தைக் காணவும் செய்த
கருணை நாயனைப் போற்றுவேன்
1. கடந்த ராவினில் கண்மணியைப் போல்
காத்தவர் எங்கள் இயேசுவே
அடர்ந்த நோய் பிணி அணுகிடாமலே
அன்பர் இயேசுவே காக்கிறார்
2. பந்தம் தீர்த்தென்னைப் பாதுகாத்தவர்
பரம நாயகன் இயேசுவே
சொந்தமாய் என்னையாளும் நாயகன்
சந்ததம் என்னைக் காக்கிறார்
3. ஆதித்தன் ஒளி வீசும் காலையில்
அன்பர் தன் ஒளி காண்கிறேன்
ஆதித்தன் என்ற பேர் படைத்த என்
அன்பர் இயேசுவே காக்கிறார்
4. மத்தியானத்தின் பாழ்கடிப்பிலும்
கர்த்தன் இயேசுவே என் காவலன்
துத்தியம் துதிப்பாடிப் போற்வே
நித்தமும் கிருபை செய்குவீர்
5. இந்த நாளிலும் என்னைக் காப்பவர்
இன்பமான என் இயேசுவே
சந்ததம் உண்மை சாட்சி கூறவே
சிந்தை கூர்ந்தென்னைத் தேற்றுவீர்
6. இந்த நாளில் நான் செய்யும் ஊழியம்
எந்தையே உமக் கேற்றதாய்
சொந்தமாய் உந்தன் கணக்கிலே வைத்து
சந்ததம் என்னைத் தேற்றுவீர்

Leave a Comment Cancel Reply

Exit mobile version