Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம்

பல்லவி
தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!
அனுபல்லவி
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்
சரணங்கள்
1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை
ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய்[1]
நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ
நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய்
நின்றீரே, நடுவராய் நின்றீரே; தீதை எல்லாம்
கொன்றீரே, பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய. – தோத்தி
2. சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;-நேய
சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்;
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;- கரம்
நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்;
நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம்
சொல்லும், ஐயா; தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா! – தோத்தி
3. நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;-பவ
நிந்தையோ டென் சுய கந்தை[2] அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்;
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும்; – பதஞ்
சாற்றித் தினம் உமைப் போற்றிப் பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்;
சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள
சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே, தேவே. – தோத்தி

Leave a Comment Cancel Reply

Exit mobile version