Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே

பல்லவி
தருணம் இதில் யேசுபரனே!-உமதாவி
தரவேணும் சுவாமீ!
அனுபல்லவி
அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி
அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம்
சரணங்கள்
1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்
மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,
சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்
சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம்
2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்
பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,
சாவுற்றோர்களை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்
மா வீரராய் விளங்க வல்லாவியே இறங்க. – தருணம்
3. ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை
அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து,
மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல
மேய்ப்பரே, அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க. – தருணம்
4. ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து
ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட,
வாக்குக் கடங்காப் பெருமூச்சோடே எமக்காக
மன்றாடும் ஜெப ஆவி என்றென்றும் நிரம்பிட. – தருணம்
5. மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து
மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத்,
தேசுறு அருள்நாதா, தாசர் உள்ளத்தினின்று
ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய. – தருணம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version